Sunday, February 23, 2014

டெல்லியில் சமாஜ்வாதி கட்சி பிரம்மாண்ட சைக்கிள் பேரணி... காங்., பா.ஜ.க.வை புறக்கணிக்க அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த அவர், தொண்டர்களை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற பாடுபடுமாறு அகிலேஷ் யாதவ், தொண்டர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்திரப்பிரதேச அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

மேலும் பேசிய அவர் இந்த சைக்கிள் பேரணி மூலம், கட்சித் தொண்டர்கள் நமது சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றும் சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்று சக்தியாக சமாஜ்வாதி கட்சியை முன்னிறுத்த முலாயம்சிங் யாதவ் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக கட்சி சின்னமான சைக்கிளை வைத்து பேரணி நடத்தி மக்களை கவரும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். உத்திரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவை தொகுதிகளில், 70 தொகுதிகளை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி வியூகம் அமைத்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.