Saturday, February 22, 2014

உக்ரைனில் போராட்டக்காரர்களின் கை ஓங்கியது: தலைநகரை விட்டு அதிபர் வெளியேறினார்

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்ததையடுத்து கடந்த 3 மாதமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் பேராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிபருக்கு எதிராக சமீபத்தில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினர்.

இந்நிலையில், தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அதிபர் விக்டர் யானுகோவிச், தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விட்டாலி கிளிட்ஸ்கோ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். மேலும், மே மாதம் 25-ம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் நெருக்கடி முற்றியதையடுத்து தனது அதிகாரங்களை ஒப்படைத்த அதிபர், முன்கூட்டியே தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டதுடன் கிழக்கு உக்ரைனில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.