Saturday, February 22, 2014

தே.மு.தி.க.–பா.ம.க.–ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு: பொன்.ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க. – பா.ம.க.– ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் தாமரையின் சமூக நீதி மாநாடு திருப்பாலை கிருஷணன் கோவில் மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநிலத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் பழனிவேல்சாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவின் அகில இந்திய தலைவர் சஞ்சய் பாஸ்வான், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் சஞ்சய் பாஸ்வான் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் நீங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து விட்டீர்கள். காங்கிரஸ் இல்லாத தமிழகம் வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை பாராட்டுகிறேன். அதே போன்று காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் செயல்பட வேண்டும். அதற்காக மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாக திறமையின்மை, ஊழல் போன்றவற்றை எடுத்துக்கூற வேண்டும். பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலே இருந்து வரு கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் குடும் பத்திலும் ஒருவருக்கு வேலை உறுதி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு சஞ்சய் பாஸ்வான் பேசினார்.
மாநாட்டில் பொன்.ராதா கிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க. அமைக்க உள்ள கூட்டணியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணிதான் தமிழகத்திலும், மத்தியிலும் முதல்நிலை கூட்டணியாக திகழும். நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பது அனைவரது மனதிலும் உள்ளது.
தேர்தல் முடிவில் இது வெளிப்படும். குஜராத் மாநிலத்தில் படிக்காத பெண்களே இல்லை என்ற நிலையை நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றால் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் நிலை உயரும்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார்.
மாநாட்டு முடிவில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் ‘‘தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) ஆகிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும்’’ என்று கூறினார்.