Saturday, February 22, 2014

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

டெல்லி: மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தொடர்ந்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் அடுத்த 3 மாதங்களில் வரஉள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பண்டிகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் மாநிலங்களிலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்படும் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில் 6 கட்டங்களாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைபெறும் தேதிகளை 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அநேகமாகவரும் 27-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.