Saturday, February 22, 2014

ஆதாரமின்றி கிடந்த ஆதார் அட்டை மூட்டை

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் ஆற்றங்கரையோரம் கேட்பாரற்று அனாதையாக கிடந்த ஆதார் அட்டைகள் மற்றும் அரசு தொடர்பான ஆவணங்கள் அரசின் அலட்சியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசின் உதவித்தொகை, மானியம் உள்ளிட்ட பணச்சலுகைகளை ஏழை, எளிய மக்கள் வங்கிகளின் மூலம் நேரடியாக பெற்று பலன் அடையும் வகையில் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்காக நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கானோருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பலரது அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, வினியோகத்திற்காக மாவட்ட ஆணையாளர்களின் அலுவலகங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வகையில், மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு ‘பத்திரமாக’ அனுப்பி வைக்கப்பட்ட ஆதார் அட்டைகள் கொண்ட தபால் மூட்டை இம்பால் ஆற்றங்கரை பகுதியில் கேட்பாரற்று அனாதையாக கிடப்பதை கண்ட உள்ளூர்வாசிகள், முக்கியமான ஆவணங்களை முறையற்ற வகையில் கையாளும் அரசின் அலட்சியப் போக்கை எண்ணி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தை சேர்ந்த 769 பேரின் ஆதார் அட்டைகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்களின் முக்கிய ஆவணங்களும் அந்த தபால் மூட்டைக்குள் இருந்தன. இந்த மூட்டையை ஆற்றங்கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பார்த்த உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். ஊடகங்களின் மூலம் தபால் துறையின் அலட்சியப் போக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘இதைப் போன்று எத்தனை ஆதார் அட்டை மூட்டைகள் நாடெங்கிலும் உள்ள ஆற்றங்கரை ஓரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கேட்பாரற்று கிடக்கின்றனவோ? இவை கிடைக்கப் பெறாத மக்கள் அரசின் பணப்பலன்களைப் பெற என்னப் பாடுபடப்போகிறார்களோ?’ என இம்பால் நகரை சேர்ந்த ஒரு முதியவர் வேதனையுடன் கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் குப்பைத் தொட்டி ஒன்றில் 850 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.