Thursday, February 27, 2014

மைனாவுக்கு கட்டிப்பிடிக்காவிட்டால் தூக்கமே வராதாம்

தலைவாவுடன் ஆட்டம் போட்ட மைனா நடிகை செல்லமாக நாய்க்குட்டி ஒன்றை வைத்து வளர்த்து வருகிறாராம். பல நடிகைகள் தாங்கள் வளர்க்கும நாய்க்குட்டியை பாதுகாக்க அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். சூட்டிங் இல்லாத நேரத்தில் அவற்றுடன் கொஞ்சி விளையாடி பொழுதைக் கழிப்பர். 

ஆனால், பால் நடிகையோ இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் தனது செல்ல நாய்க்குட்டியை எங்கும் அலைய விடாமல், இவர் உறங்கும்போதும் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்கிறாராம். 

இதற்கு முன் நடிகைகு இப்படியொரு பழக்கம் இருந்தது கிடையாதாம். திடீரென தனது நாய்க்குட்டி மீது பாசம் வந்ததில் இருந்து அதை கட்டிப்பிடித்து தூங்கினால்தான் இவருக்கு தூக்கமே வருகிறதாம். இதனால் நடிகையின் தாய்க்குலம் அவரின் எதிர்காலத்தை எண்ணி ஏக்கத்தில் கண்ணீர் விடுகிறாராம். 

இயக்குனரை மாமா என்று அழைக்கும் நடிகை!

நாடோடியாய் தமிழ் சினிமாவில் நுழைந்து, எங்கேயோ சென்று எப்போதும் போல் வலம்வந்து புலிவாலை பிடித்த மலையாள நடிகை தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வரத் தொடங்கிவிட்டார். தற்போது இவர் கைவசம் ஒருசில படங்கள் இருந்தாலும், தன்னை தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய சுப்ரமணியத்தாரை தினமும் நன்றியுடன் நினைவு கூர்கிறாராம். 

இவரை எப்போதும் மாமா என்றுதான் உரிமையோடு அழைப்பாராம். தன்னுடைய குருவாகவும், வழிகாட்டியாகவும் அவரைதான் நினைவில் வைக்கிறாராம். தன்னுடைய குருநாதரை பின்பற்றி நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பு, இயக்கம் என சினிமாவின் மற்ற துறையிலும் கால் பதிக்க முடிவு செய்துள்ளாராம்.

சென்னையில் 95 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில விளையாட்டு போட்டி

சோழிங்கநல்லூரில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 12–வது கல்லூரிகள் இடையேயான ‘ஜெட்ஸ்’ மாநில விளையாட்டுப்போட்டி மார்ச் 1–ந்தேதி, 2–ந்தேதி மற்றும் 8–10–ந்தேதிகளில் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் இருந்து என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகம், பெண்கள் கல்லூரி என 95 அணிகள் பங்கேற்கின்றன.
கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, பால் பேட்மின்டன், பேட்மின்டன் (ஆண்கள் மட்டும்) டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து (ஆண்கள் மட்டும்) ஆகிய 8 விளையாட்டுகள் நடக்கிறது.
பெண்கள் விளையாட்டுப் போட்டி வருகிற 1 மற்றும் 2–ந்தேதிகளில் நடக்கிறது. ஆண்கள் விளையாட்டு போட்டி 8–ந்தேதி முதல் 10–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்தப்போட்டிக்கான மொத்த செலவு ரூ.12.28 லட்சம் ஆகும். கடந்த முறை செயிண்ட்ஸ் ஜோசப்ஸ் அணி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
மேற்கண்ட தகவலை செயிண்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் பாபு மனோகரன் தெரிவித்துள்ளார்.

மார்ஷல் நேசமணி மணி மண்டபம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடு பட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள் அமைத்தல் போன்ற பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியை தாய்த்தமிழகத்துடன் தக்க வைத்துக் கொள் வதற்காகவும் போராட்டங் கள் நடத்தி தியாகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருமை பெற்றவர் ஆவார். மார்ஷல் நேசமணி நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டு செய்தவர் ஆவார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மார்ஷல் நேசமணியின் அரும்பணியை நினைவு கூர்ந்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று நாகர் கோவிலில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டார்.
மார்ஷல் நேசமணியின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் 48 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராஜீவ் காந்தி சிலை உடைப்பு: பெரம்பூரில் காங்கிரசார் மறியல்

பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் 2 இடங்களில் ராஜீவ் காந்தி சிலைகள் உடைக்கப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் இன்று காலை காங்கிரசார் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் அந்த இடம் அருகே திரண்டனர்.
சிலையை உடைந்தவர்களை கைது செய்யக்கோரி அவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் சீமானை கைது செய்கக் கோரி கோஷமிட்டு சாலையில் அமர்ந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். சக்திவேல், ஜோதி, ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, சுரேஷ் பாபு, சூளை ராஜேந்தர், கொண்டல் தாசன், மணிபால், அகரம் கோபி, மகளிர் அணி அபி உள்பட 500–க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்

Sunday, February 23, 2014

தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல் 20 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாயின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் தலிபான் தீவிரவாதிகள் வன்முறை தாக்குதல்களின் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். 

அவர்களை அரசுப் படையினர் வேட்டையாடுவதும், பழிக்குப் பழியாக ராணுவ வீரர்களை தலிபான்கள் தாக்கிக் கொல்வதும் தொடர் வாடிக்கையாகி விட்டது. 

இந்நிலையில், குணார் மாகாணம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ராணுவ புறக்காவல் நிலையத்தின் மீது இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் பயங்கரமான வெடிப்பொருட்களை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

படுகாயமடைந்த 7 ராணுவ வீரர்களை தலிபான்கள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்பதற்கான நடவடிக்கைகல் முழு வேகத்தில் நடந்து வருவதாக குணார் மாகான கவர்னர் ஷுஜா உல் முல்க் ஜலாலா தெரிவித்துள்ளார். 

டெல்லியில் சமாஜ்வாதி கட்சி பிரம்மாண்ட சைக்கிள் பேரணி... காங்., பா.ஜ.க.வை புறக்கணிக்க அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்


மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் பேரணியை துவக்கி வைத்த அவர், தொண்டர்களை பார்த்து உற்சாக குரல் எழுப்பினார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற பாடுபடுமாறு அகிலேஷ் யாதவ், தொண்டர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், உத்திரப்பிரதேச அரசின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

மேலும் பேசிய அவர் இந்த சைக்கிள் பேரணி மூலம், கட்சித் தொண்டர்கள் நமது சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆட்சி மாற்றம் நிச்சயம் நடைபெறும் என்றும் சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார். காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு மாற்று சக்தியாக சமாஜ்வாதி கட்சியை முன்னிறுத்த முலாயம்சிங் யாதவ் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதற்காக கட்சி சின்னமான சைக்கிளை வைத்து பேரணி நடத்தி மக்களை கவரும் திட்டத்தை அவர் செயல்படுத்தி வருகிறார். உத்திரப்பிரதேசத்திலுள்ள 80 மக்களவை தொகுதிகளில், 70 தொகுதிகளை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி வியூகம் அமைத்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஆத்மி போல் எக்கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத் தயார்!


ரோதக்: டீ விற்றதாக கூறிக்கொள்ளும் நரேந்திர மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மோடியின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார பேரணிக்கும் ரூ.50 கோடி செலவாகிறது என்றும் குறிப்பிட்டார். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கும், பாஜகவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் மோடியின் பேரணி செலவுகளுக்கு பணம் கொடுப்பவர் முகேஷ் அம்பானி என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் கெஜ்ரிவால் தெரிவித்தார். கடினமான கேள்விகளை மோடியின் முன் மக்கள் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.நரேந்திர மோடியை ஊடகங்கள் தான் பெரிய தலைவராக காட்டுவதாகவும், அம்பானியின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்ணை தர தாம் தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் முகேஷ் அம்பானி மீது பாஜக நடவடிக்கை எடுக்கத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மோடியும், ராகுல் காந்தியும் அம்பானியின் சட்டைப் பையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலின் அதிரடி குற்றச்சாட்டுக்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை துவக்கி பேசிய கெஜ்ரிவால், ஆம்ஆத்மி போல் எந்தக் கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார். டெல்லியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தால் ஊழலை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொள்கைக்காகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அமைச்சர் காமராஜ் ரத்ததானம்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 66–வது பிறந்தநாளையொட்டி தமிழக உணவுத்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ஆர்.காமராஜ் 18–வது முறையாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இன்று (23–ந்தேதி) ரத்ததானம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவருடன் அ.தி.மு.க.வை சேர்ந்த 666 பேரும் ரத்ததானம் செய்தனர். பின்னர் நன்னிலம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 6666 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், தையல் எந்திரம், வேட்டி சேலைகள், 3 சக்கர சைக்கிள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் விஜயராகவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி.பி.ஜி. அன்பு, மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம், திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி அம்பிகாபதி, திருவாரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மலர்மணிகண்டன், ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன், நகர்மன்ற தலைவர் வி.ரவிச்சந்திரன், நகர பேரவை செயலாளர் எஸ்.கலியபெருமாள், ஒன்றிய பேரவை செயலாளர் முருகானந்தம், திருவாரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஏ.எஸ்.அன்னக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வலங்கைமான் அருணாச்சல கார்டனில் நடைபெறும் விழாவில் 3 ஆயிரத்து 300 பேருக்கு நலத்திட்ட அமைச்சர் காமராஜ் வழங்குகிறார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இந்திய கருவூலத்தை அபகரிக்க நினைக்கும் கை தடுக்கப்படும்: மோடி பேச்சு


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிற்கு சேவை செய்ய உங்களது ஆசிர்வாதங்களை எனக்கு வழங்குங்கள். குஜராத்திற்கும் பஞ்சாபிற்கும் சிறப்பு இணைப்பு உள்ளது. புஜ் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் குரு நானக் தேவ் தங்கியிருந்த குருத்வாரா சேதமடைந்ததது. அதை வல்லுனர்களை கொண்டு உடனடியாக கட்டி தர நடவடிக்கை எடுத்தோம். 

குஜராத்திலுள்ள கட்ச் பகுதி ஒரு வரண்ட பூமியாகும். அப்பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரண்ட பூமி அவர்களின் கடுமையான உழைப்பால் இன்று பசுமையாக காட்சி தருகிறது. குஜராத்தில் வசிக்க ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது. அங்கு வசிக்கும் எந்த சீக்கிய விவசாயியும் வெளியேற வேண்டியதில்லை. மாறாக அவர்களுக்கு இடைஞ்சல் தரும் அதிகாரிகள் தான் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். 

காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரி வரை இந்தியா ஒன்றே. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இங்குள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையுடையவர்கள் ஆவார்கள். உங்கள் ஆசியோடு இந்தியாவிற்கு சேவை வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இந்திய நாட்டின் கருவூலத்திற்கு பாதுகாவலானாக இருந்து அதை கைப்பற்ற நினைக்கும் "கை" யை தடுப்பேன் என்று மோடி கூறினார்.

வலியோடு இருப்பவருக்கு உதவுங்கள்: ராகுல்


உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது; 

உத்தராகண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது நமது தேசம் முழுவதும் அதன் பின்னால் நின்று உதவியது. அது போல் நாட்டில் எங்கு பாதிப்புகள் நேர்ந்தாலும், அங்கு சென்று வலியால் துடிப்பவர்களுக்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அரசியலில் கர்வத்திற்கு என்றும் இடமில்லை. ஒருவருடைய வலியை உணரவேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள கர்வத்தை வெளியேற்றவேண்டும். இன்று இம்மாநில முதலமைச்சரிடம் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு குறித்து விவாதித்தேன். 

இம்மாநிலத்தில் சுற்றுலா காலம் துவங்குவதற்கு முன் இங்கு மறுகட்டமைப்பு பணிகள் முடிந்துவிடும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இங்கு பேரிழப்புகள் ஏற்பட்டபோது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர். 

இம்முயற்சியில் தங்கள் ராணுவ வீரர்கள் சிலரையும் அவர்கள் இழந்தனர். நாட்டில் உள்ள பெண்கள் 12 எரிவாயு சிலிண்டர்கள் வேண்டும் என்றார்கள். அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள் முன்னேறாமல் நமது நாடு ஒரு போதும் வல்லரசாக முடியாது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்வதாக முதல்வர் கூறினார். 

நான் அவரிடம் 20 மணி நேரம் வேலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். எனது தந்தை தான் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தியாவிற்கு கொண்டு வந்தார். ஆனால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு தாங்கள் தான் காரணம் என்று எதிர்க்கட்சினர் கூறுகின்றார். ஆனால் இது முற்றலும் பொய்யான தகவலாகும் என ராகுல் கூறினார்.

சவூதி இளவரசர் 26-ம் தேதி இந்தியா வருகை


சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 3 நாள் பயணமாக வரும் 26-ம் தேதி இந்தியா வருகிறார். 

சமீபத்தில் சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றிருந்த இந்திய துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, அந்நாட்டின் பட்டத்து இளவரசரை சந்தித்த போது இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

அவரது அழைப்பை ஏற்று சவுதியின் துணை பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் வரும் புதன்கிழமை இந்தியா வருகிறார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள இளவரசருடன் சவூதியின் மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகின்றனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ரியாத் மாகாண கவர்னராக பதவி வகித்த போது இந்தியா வந்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக டெல்லி வருகிறார். வரும் 28-ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா- சவூதி அரேபியாவுக்கிடையில் கடந்த ஆண்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு தேவையான பெட்ரோலிய கச்சா எண்ணையின் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 30 லட்சம் இந்தியர்கள் சவூதியில் வேலை செய்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். 

சவூதி மன்னரான அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கடந்த 2006-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அரியானா முதலமைச்சர் நிலத்தரகராக செயல்படுகிறார்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு


அரியானா மாநிலத்தில் உள்ள ரோடக் நகரில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் உர விலை உயரப்போகிறது. இதில் பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றது. 

எரிவாயு விலை நிர்ணயம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பாக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டேன். அது போல் கருப்பு பணத்தை கொண்டு வருவோம் என மோடி கூறி வருகிறார். நான் இங்கே அம்பானியின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு வந்துள்ளேன். அதன் மீது மோடி நடவடிக்கை எடுக்க தயாரா என கேள்வியெழுப்புகிறேன். 

இங்கு சாமானிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இம்மாநில முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா முதலமைச்சராக செயல்படாமல் நிலத்தரகர் போல் செயல்படுகிறார். 

அம்பானி நிறைய செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் பொறுப்பாசிரியர்களை அழைத்து மோடி மற்றும் ராகுல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புங்கள். கெஜ்ரிவாலை புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு பொறுப்பாசிரியர் மட்டும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சியினர் டாடா மற்றும் ரிலையன்ஸ் போன்ற பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தி வருகின்றனர். 

ஆனால் நாங்கள் ஏழை மக்களுக்காக பணிபுரிந்தோம். உடனே எங்களை அழிக்க நினைக்கிறார்கள். நாங்கள் பதவிக்காக ஆட்சி நடத்த முன்வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சிக்கு வந்தோம். அவ்வாறு நல்லது செய்யாதவாறு இரண்டு கட்சிகளும் தடுத்ததால் பதவியே தேவையில்லை என்று ராஜினாமா செய்தோம் என கெஜ்ரிவால் பேசினார்.

சோனியாவுடன் சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு


தெலுங்கானா மாநிலம் அமைக்க முழு முயற்சி மேற்கொண்ட சோனியா காந்தியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்துடன் சந்தித்தார்.

அப்போது அவருக்கு தெலுங்கானா மக்களின் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ராவ் தெரிவித்தார். ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவை பிரிக்க சோனியா எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என ராவ் மேலும் கூறினார்.

பின்னர் செய்தியார்களிடம் பேசிய ராவ், சோனியாவுக்கு நன்றி மட்டும் தெரிவித்ததாகவும், வேறு எதுவும் அரசியல் பேசவில்லை என்று தெரிவித்தார். தெலுங்கானா மாநில விவகாரத்தை கவனித்து வந்த திக் விஜய் சிங்குடன் கலந்து பேசி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சத்யநாராயணா கருத்து தெரிவிக்கையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தங்கள் கட்சியுடன் வெகு விரைவில் இணையும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

பேஸ்புக்கை ஆட்டி படைத்த வாட்ஸ் ஆப்’ ஆக்டன்




வரலாறு 

பிரைன் கதை  நிச்சயம் பிரமிக்கத ஒன்று.... யார் நம்மை ஒதுகினாலும் அதிலிருந்து வீறு கொண்டளுவது எப்படி என்ற தத்துவமே அடங்கியுள்ளது 

இதே பிரைன் நான்கு ஆண்டுகளுக்குமுன் பேஸ்புக்   நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார்.அவருக்கு கிடைத்த பதில் நீ வேண்டாம் என்பதே...

ஆனால் இன்று பிரைன் நிறுவன  வாசலில் வந்து  அவரது நிறுவனதை இருகைகளும்  ஏந்தி வாங்கியுள்ளது. பேஸ்புக்... 

 பேஸ்புக்கிடம்  வேலைகேட்டு போய் அவர்கள் நிரகரித்தவுடன் அதை ட்விட்டரில் போட்டிருக்கிறார் பிரைன் அதில் என்னை  பேஸ்புக்  நிராகரித்து விட்டது.அருமையான மக்களுடன் இணைத்திருக்க கிடைத்த வாய்ப்பு அது.வாழ்க்கையின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரைன்...

பேஸ் புக் நிரகரித்தவுடன் சோர்ந்து போய் விடவில்லை பிரைன். தனது கடினமான உழைப்பால் பேஸ் புக் தன்னை தேடி வர வைத்து விட்டார் பிரைன் தனது வாட்ஸ் ஆப் சாதனையால்...

பேஸ்புக்கில் வேலைகேட்டு கிடைக்கவில்லையே என்று விரக்க்தியில் ட்விட்டரில் செய்தி போட்டிருந்தார் அல்லவா..

சோகம் என்னவென்றால் டூவிடரும் கூட ப்ரைனை ஒரு கட்டத்தில் நிராகரித்த நிறுவனம்தான்...


நாமெல்லோரும் முட்டையில் இருந்து கோழி வந்தாதா....  கோழியில் இருந்து முட்டை வந்தாதா... என்று கதை பேசிக்கொண்டிருக்கிறோம் 


ஆனால் ப்ரைன்னை பாருங்கள்....ஒரு முட்டைக்கு பக்கத்தில் எத்தனை முட்டையை போட்டு பேஸ்புக்கை ஆட்டி படைத்தது விட்டார் பாருங்கள் .....

தலிபான்கள் மீது தொடரும் விமான தாக்குதல்: வசிரிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் பழங்குடியினர் வெளியேறினர்

வன்முறை தாக்குதல்களின் மூலம் கடந்த பத்து வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துடன் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

எனினும், கடந்த 2010 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 23 துணை ராணுவ சிப்பாய்களைக் கொன்ற விபரத்தை தலிபான் இயக்கம் வெளியிட்டதில் அமைதிப் பேச்சுவார்த்தை பின்னடைவைச் சந்தித்தது.

இந்த நிலையில், தலிபான்கள் மறைந்து வாழும் பழங்குடிப் பகுதியான வசிரிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி பகுதி மற்றும் கைபர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி விமான தாக்குதலில் 40 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கைபர் பகுதி தொழிற்சாலை ஒன்றில் தயாரான வெடிபொருட்களும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்தொழிப்பதற்கான அதிரடி திட்டம் ஒன்றினை பாகிஸ்தான் ராணுவம் தீட்டி வருவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூட்டம் கூட்டமாக அப்பகுதியை விட்டு வெளியேறி வருகினர். கடந்த ஒரு மாத காலத்தில் 50 ஆயிரம் மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுக்கோட்டை வாரச்சந்தையில் பெரும் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு 120 கடைகள் உள்ளன. இந்த பகுதியில் இன்று மதியம் திடீரென ஒரு கடையில் தீப்பிடித்தது. அந்த தீ அங்கிருந்த மற்ற கடைகளிலும் பரவியது.

கடைகள் பெரும்பாலும் மூங்கில்கள், கீற்றுக் கொட்டைகளை பயன்படுத்தியே அமைந்திருந்தால் பெரும் தீயாக பரவியது. இந்த வாரச்சந்தைக்கு அருகிலிருந்த குடிசைப் பகுதிகளுக்கும் தீ பரவியது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

வாரச்சந்தை கடைகளில் சுமார் 20 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. மேலும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு நிமிடத்தில் 133 தேங்காய்களை வெறுங்கைகளால் உடைத்து வாலிபர் சாதனை

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் வசிக்கும் பிரமோத் யாதவ் என்ற வாலிபர் வெறுங்கைகளால் ஓரே நமிடத்தில் 133 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். டாமாட்ரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இச்சாதனையை செய்தார்.

இச்சாதனையை தொடர்ந்து உலக சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது. விரைவில் அவர் லண்டனுக்கு பயணம் செய்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரமோத் ஒரு நிமிடத்தில் 100 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 22, 2014

தேர்தலுக்குப்பின் தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை: அத்வானி


“பா.ஜ.க.வின் நல்லநேரம் ஆரம்பித்துவிட்டது. வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். எனவே தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

இன்று பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அத்வானி பேசுகையில், “காங்கிரஸ் அரசுக்கு இது கெட்ட நேரம். சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவிற்கு ஊழல்மிக்க காங்கிரஸ் இத்தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரசின் ஊழல் நடவடிக்கைகள், அதன் கொள்கைகளே அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும். மாறாக பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும்” என்று தெரிவித்தார்.

இப்பேட்டியின்போது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உடனிருந்தார்.

அரசியல் தலைவர்களுடன் நேரடியாக பேஸ் புக்கில் பேச புது வசதி

புதுடெல்லி: இந்தியாவில் சமூக இணைய தளம் மூலமாக பிரபல அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேள்வி கேட்கும் வசதியை பேஸ் புக் இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் 2014 ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளில் தேசிய தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தற்போது புதிய உத்தியாக உள்ளது. இதில்  பேஸ் புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் ஏற்கனவே நாட்டு நடப்பு குறித்தும், தங்கள் கொள்கைகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்தும் கருத்துக்களை அரசியல்வாதிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பிரபல அரசியல்வாதிகள் மக்களுடன் நேரலையில் கலந்துரையாட பேஸ்புக்கில் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மார்ச் 3ம் தேதி முதல் செயல்படும். இதில் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதன்முதலில் மார்ச் 3ம் தேதி அன்று மோடி மக்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கின் பொது மேலாளர் அன்கி தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மட்டும் மாதந்தோறும் 9.3 கோடி பேர் பேஸ் புக் பயன்படுத்துகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சூழலில் பேஸ்புக் வழியாக நல்லதொரு விவாத மேடையை ஏற்படுத்தி தர முடியும்.

எனவே, இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகளுடன் நேரடியாக விவாதம் செய்ய வசதியாக பேஸ்புக்கில் தனியாக பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களிடம் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவுகளை மக்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் பகிரவும் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் ஒன்றிணைக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அறிவியல் வளர்ச்சியை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதில் எப்போதும் போல மோடி முன்னணியில் இருக்கிறார்

அருணாச்சலபிரதேசம், அசாம், திரிபுரா மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்களில் இன்று பிரசாரம் செய்ய அவர் திட்ட மிட்டார்.
அதன்படி நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பசிகாட் பகுதியில் முதலில் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அருணாச்சல பிரதேச மக்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் சீனர்களை தலை தூக்க விடுவதில்லை. இங்குள்ளவர்கள் சீனாவை பார்த்து பயப்படுவதில்லை. இங்கு நான் கனத்த மனதுடன் வந்துள்ளேன். இம்மண்ணில் பிறந்த மாணவர் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவமே அதற்கு காரணம்.
அருணாச்சல பிரதேச மக்களை பார்த்த பிறகுதான் இந்திய பகுதிகளை சூரிய பகவான் பார்க்கிறார்.
உங்களின் மிகப்பெரிய பிரச்சினை வளர்ச்சிதான். மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாரதீய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இறந்த மாணவனின் குடும்பத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடலில் ஓடும் ரத்தம்தான் எனது உடலிலும் ஓடுகிறது. பரம்பரை ஆட்சி, சிபாரிசு ஆகியவை வளர்ச்சிக்கு உதவாது. தாமரை ஆட்சி மலர்ந்தால் வளமும், வளர்ச்சியும் பெருகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து அசாம் (சில்சார்), திரிபுரா (அகர்தலா) ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தே.மு.தி.க.–பா.ம.க.–ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு: பொன்.ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க. – பா.ம.க.– ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் தாமரையின் சமூக நீதி மாநாடு திருப்பாலை கிருஷணன் கோவில் மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநிலத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் பழனிவேல்சாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவின் அகில இந்திய தலைவர் சஞ்சய் பாஸ்வான், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் சஞ்சய் பாஸ்வான் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் நீங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து விட்டீர்கள். காங்கிரஸ் இல்லாத தமிழகம் வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை பாராட்டுகிறேன். அதே போன்று காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் செயல்பட வேண்டும். அதற்காக மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாக திறமையின்மை, ஊழல் போன்றவற்றை எடுத்துக்கூற வேண்டும். பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலே இருந்து வரு கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் குடும் பத்திலும் ஒருவருக்கு வேலை உறுதி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு சஞ்சய் பாஸ்வான் பேசினார்.
மாநாட்டில் பொன்.ராதா கிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க. அமைக்க உள்ள கூட்டணியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணிதான் தமிழகத்திலும், மத்தியிலும் முதல்நிலை கூட்டணியாக திகழும். நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பது அனைவரது மனதிலும் உள்ளது.
தேர்தல் முடிவில் இது வெளிப்படும். குஜராத் மாநிலத்தில் படிக்காத பெண்களே இல்லை என்ற நிலையை நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றால் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் நிலை உயரும்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார்.
மாநாட்டு முடிவில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் ‘‘தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) ஆகிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும்’’ என்று கூறினார்.

உக்ரைனில் போராட்டக்காரர்களின் கை ஓங்கியது: தலைநகரை விட்டு அதிபர் வெளியேறினார்

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்ததையடுத்து கடந்த 3 மாதமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் பேராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிபருக்கு எதிராக சமீபத்தில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினர்.

இந்நிலையில், தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அதிபர் விக்டர் யானுகோவிச், தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விட்டாலி கிளிட்ஸ்கோ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். மேலும், மே மாதம் 25-ம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் நெருக்கடி முற்றியதையடுத்து தனது அதிகாரங்களை ஒப்படைத்த அதிபர், முன்கூட்டியே தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டதுடன் கிழக்கு உக்ரைனில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ஆவேன் : லாலு பிரசாத்

கால்நடை தீவன ஊழல் வழக்கு என்னுடைய பிரதமர் ஆசையை கட்டுப்படுத்தாது. நானும் ஒருநாள் பிரதமராக வருவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.பாஜ, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல் காங்கிரசிலும் மறைமுகமாக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருக்கின்றனர். இதில் ஏற்கனவே முலாயம் சிங், மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றோர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் ஆக வேண்டும் என அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் பதவியை பிடிப்பதற்கு பலரும் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் அவர்களை போல் பிரதமர் ஆசையை பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தீவன ஊழல் வழக்கு எனது பிரதமர் கனவுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. நானும் ஒருநாள் இந்த நாட்டின் பிரதமராக வருவேன். ஒருநாள் என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று ஆணை வரும். அப்போது நான் பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடம் மீது ராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு: 9 பேர் சாவு

வடமேற்கு பாகிஸ்தானின் ஹங்கு மாவட்டம், தால் நகரம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் ஹெலிகாப்டரில் விரைந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்பட்ட வளாகத்தின்மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அங்கு பதுங்கியிருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ராணுவ தாக்குதலில் 9 பேர் இறந்ததாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் உறுதி செய்தன.

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி சிறுவன் பலி

திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் தவசிமலை. இங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஒரு காளை திறந்து விட்டதும், சீறிக்கொண்டு பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை முட்டித்தள்ளியது. இதில் சிவக்குமார் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

டெல்லி: மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தொடர்ந்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் அடுத்த 3 மாதங்களில் வரஉள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பண்டிகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் மாநிலங்களிலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்படும் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில் 6 கட்டங்களாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைபெறும் தேதிகளை 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அநேகமாகவரும் 27-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.

நளினி–முருகன் உருக்கமான சந்திப்பு


ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என அறிவித்தது.
இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
வேலூர் ஜெயிலில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது.
வேலூர் நிலஅபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். காலை 7.30 மணி முதல் 8 மணி வரை முருகன்–நளினி சந்தித்து பேசினர்.
அப்போது தூக்குதண்டனை ரத்து குறித்தும், லண்டனில் டாக்டருக்கு படிக்கும் மகள் அரித்ரா பற்றியும் உருக்கமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
விடுதலை தடை செய்யப்பட்டது குறித்து பேசிய போது நளினி கண்ணீர் மல்க பேசியுள்ளார். சந்திப்புக்கு பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பு சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்தி பேரனைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பேரன் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டி

ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை அறிவித்தது. இதில் பிரபல சமூக சேவகி மேதா பட்கர் (மும்பை வட கிழக்கு), முகேஷ் பிஸ்வாஸ் (அமேதி) உள்ளிட்ட 20 பேர் பெயர் இடம் பெற்றது.
அடுத்ததாக 2–வது பட்டியலை வெளியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. வேட்பாளர்களை இறுதி செய்வதில் அந்த கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
2–வது பட்டியலில் நேற்று அந்த கட்சியில் சேர்ந்த காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பெயர் இடம் பெறுகிறது. அவரைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, பிரபல பாடகர் ரப்பி ஷெர்கில், ராக்கி பிர்லா ஆகியோரது பெயர்களும் இடம் பெறுகிறது.
ஆதர்ஷ் சாஸ்திரி லக்னோ தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் லால்ஜி தாண்டனை எதிர்த்தும், ரப்பி ஷெர்கில் அமிர்தசரஸ் தொகுதியிலும், ராக்கி பிர்லா வடமேற்கு டெல்லியிலும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ கம்பெனி நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் பெயரும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் புதுடெல்லி தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.
தொழில் அதிபரான ராஜீவ் பஜாஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிர ஆதரவாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரமின்றி கிடந்த ஆதார் அட்டை மூட்டை

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் ஆற்றங்கரையோரம் கேட்பாரற்று அனாதையாக கிடந்த ஆதார் அட்டைகள் மற்றும் அரசு தொடர்பான ஆவணங்கள் அரசின் அலட்சியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசின் உதவித்தொகை, மானியம் உள்ளிட்ட பணச்சலுகைகளை ஏழை, எளிய மக்கள் வங்கிகளின் மூலம் நேரடியாக பெற்று பலன் அடையும் வகையில் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்காக நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கானோருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பலரது அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, வினியோகத்திற்காக மாவட்ட ஆணையாளர்களின் அலுவலகங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வகையில், மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு ‘பத்திரமாக’ அனுப்பி வைக்கப்பட்ட ஆதார் அட்டைகள் கொண்ட தபால் மூட்டை இம்பால் ஆற்றங்கரை பகுதியில் கேட்பாரற்று அனாதையாக கிடப்பதை கண்ட உள்ளூர்வாசிகள், முக்கியமான ஆவணங்களை முறையற்ற வகையில் கையாளும் அரசின் அலட்சியப் போக்கை எண்ணி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தை சேர்ந்த 769 பேரின் ஆதார் அட்டைகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்களின் முக்கிய ஆவணங்களும் அந்த தபால் மூட்டைக்குள் இருந்தன. இந்த மூட்டையை ஆற்றங்கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பார்த்த உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். ஊடகங்களின் மூலம் தபால் துறையின் அலட்சியப் போக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘இதைப் போன்று எத்தனை ஆதார் அட்டை மூட்டைகள் நாடெங்கிலும் உள்ள ஆற்றங்கரை ஓரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கேட்பாரற்று கிடக்கின்றனவோ? இவை கிடைக்கப் பெறாத மக்கள் அரசின் பணப்பலன்களைப் பெற என்னப் பாடுபடப்போகிறார்களோ?’ என இம்பால் நகரை சேர்ந்த ஒரு முதியவர் வேதனையுடன் கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் குப்பைத் தொட்டி ஒன்றில் 850 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

வேளாண்மை துறை சார்பில் ரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயற்கை வள மேலாண்மை இயக்கக அலுவலகக் கட்டடம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்திற்கு பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், நுண்ணுயிரியல் துறை உயிர் உரங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், எரிசக்தி பயிற்சிக் கூடம், மரபணு வங்கி துறை பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், அச்சுக்கூடம் விரிவாக்கம், ஆசிரியர் விடுதி, பன்னாட்டு மாணவர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கோயம் புத்தூர் மாவட்டம், ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்புக் கிடங்கு; மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் 1 கோடியே 28 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி, கலந்தாய்வு அரங்கம் மற்றும் விருந்தினர் விடுதி; நீலகிரி மாவட்டம், கூடலூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி நிலையம்;
விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டுவரும் தங்களது விளைபொருட்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத் திடவும், இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெறவும், விஞ்ஞான முறைப் படி சேமித்து, உரியகாலத்தில் விற்பனை செய்து பயன்பெறவும், விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டம்–தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் வல்லம், அரியலூர் மாவட்டம்–ஜெயங்கொண்டம், திருநெல்வேலி மாவட்டம்–திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில், ஈரோடு மாவட்டம்– கொடுமுடி மற்றும் அவல்பூந்துரை, மதுரை மாவட்டம்– திருமங்கலம், தேனி மாவட் டம்–தேனி மற்றும் கம்பம், நாமக்கல் மாவட்டம்–நாமகிரிப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம்– ஆர்.எஸ். மங்களம், விழுப்புரம் மாவட்டம்– கள்ளக்குறிச்சி, தியாகத் துருக்கம், சங்கராபுரம், வளத்தி, உழுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம்–கடலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் எடை மேடை, எடையிடும் கருவி, ஈரமானி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 22 நவீன சேமிப்புக் கிடங்குகள்;
காய்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைக்குப் பின் பாதுகாப்பு இல்லாததால் ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கவும், அதன் சேமிப்பு காலத்தை நீட்டித்து, குறைந்த செலவில் பாதுகாத்து விற்பனை செய்திட விருதுநகர் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு குளிர்பதன கிடங்கு; விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த விளைபொருட்களை வணிகர்கள் இருப்பு வைத்து பரிவர்த்தனை செய்திட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வணிகர் கடைகள்;
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை அவர்கள் விரைவாகவும், சிரமமின்றியும் விற்பனை செய்திட ஏதுவாக அரியலூர் மாவட்டம் - அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம், மதுரை மாவட்டம் - வாடிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று பரிவர்த்தனைக் கூடங்கள்; நுகர்வோருக்குத் தரமான, கலப்படமற்ற உணவு பொருட்கள் கிடைத்திடும் வகையில் தேனியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அக்மார்க் ஆய்வகம்;
விவசாயிகள் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் நோக்கத்துடன், வேளாண்துறை, விதைச்சான்று துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகளின் அலுவலகங்கள், கூட்ட அறை, கண்காட்சி அறை, கணிணி அறை, வேளாண்மை விரிவாக்க மையக்கிடங்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 10 மாவட்டங்களில் தேர்ந்தெடுத்த 10 வட்டாரங்களில் 10 உழவர் மையங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைத்திடும் வகையில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்ச நல்லூரில் 1 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உழவர் மையம்;
விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் துறைக்கென மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைத்திடும் வகையில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங் கிணைந்த வேளாண்மைத் துறை அலுவலக வளாக புதிய கட்டடங்கள்; என 39 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை சார்ந்த கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நாவலூர்குட்டப்பட்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவிலும் தலா 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உணவு பதப்படுத்தும் தொழில் முனைப்பு மையம் மற்றும் பயிற்சி நிலையங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவியர் விடுதிக்கான கூடுதல் கட்டடம், உயிர் தொழில்நுட்பவியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கூடுதல் விரிவுரை அரங்கம், பட்டு வளர்ப்புத் துறையில் அலுவலகம் மற்றும் வகுப்பறை, பயிர்வினையியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வகுப்பறை, மாணவ, மாணவியர் விடுதியில் ஓய்வு அறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள காய்கறி துறைக்கு கூடுதல் கட்டடம், வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வுக் கூடம்;
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலையரங்கம்; தேனி மாவட்டம், பெரிய குளத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில் இரண்டாம் தள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்டங் களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில் நிருவாகக் கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலும், பாலூரில் காய்கறி ஆராய்ச்சி நிலையத்திலும் புதிய அலுவலகக் கட்டடங்கள்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூர்– வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கத்திற்கு கூடுதல் கட்டடம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் விடுதி என 5 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான கட்டடங்கள்; என 13 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண் துறை சார்ந்த கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
வேளாண் பாசனத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவும், அதனுடன் நுண்ணீர் பாசன அமைப்புகளை இணைத்தும் ஒரு புதிய திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா 15.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, வேளாண்மைப் பொறியியல் துறையால் தானியங்கி சாய்மான வசதியுடன் கூடிய சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரை திறன் கொண்ட ஏ.சி. மோட்டார் விவசாய பம்புசெட் அமைப்புகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து செயல்படுத்திடும் திட்டத் தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து, நான்கு விவசாயி களுக்கு நுண்ணீர்ப் பாசன அமைப்புடன் இணைக்கப் பட்ட சூரியசக்தியால் இயங்கும் விவசாய பம்புசெட்டுகளை வாங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மைத் துறையில் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்களின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 166 புதிய ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
மொத்தம் வேளாண்மைத் துறையின் சார்பில் 162 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் தாமோதரன், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண்மை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை விற்பனை–வேளாண் வணிகத் துறை இயக்குநர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்தை சமாதானப்படுத்த தொகுதிகளை குறைப்பதா?: தமிழக பா.ஜனதா மீது அன்புமணி பாய்ச்சல்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்து விட்ட நிலையில் தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகளை சேர்க்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ஜனதா தலைவர்கள் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் இதுவரை கூட்டணி உறுதியாக வில்லை.

வண்டலூரில் மோடி பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்ய திட்டமிட்டனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை முடியாததால் யாரும் பங்கேற்க வில்லை. பா.ம.க. தரப்பில் ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். எனவே, அந்த தொகுதிகள் கட்டாயம் வேண்டும். மேலும் சமூக அமைப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 தொகுதிகள் வேண்டும் என்று பா.ம.க.தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி விஷயத்தில் தமிழக பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறை சரியில்லை என்று நரேந்திரமோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் சிலரிடமும் அன்புமணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி அமைய காலதாமதத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர்கள் தான் காரணம் என்று அன்புமணி வருத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோர் தங்கள் சொந்த வெற்றியை கருத்தில் கொண்டு செயல் படுவதாகவும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை பற்றி கவலைப்பட வில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் தே.மு.தி.க. வாக்கு வங்கி ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தை சமாதனப்படுத்த பா.ம.க. தொகுதிகளை குறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அன்புமணி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக கூட்டணி பற்றி இறுதி செய்ய காத்திருந்ததாகவும் ஆனால் தமிழக பா.ஜனதா தலைவர்கள் தே.மு.தி.க.வுக்காக காத்திருந்ததாகவும் பா.ம.க. நிர்வாகிகள் கூறினார்கள்.

பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் பா.ம.க.வுடன் கூட்டணி ஓப்பந்தத்தை இறுதி செய்யும் படி கூறி இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தலைவர்கள் தான் காலம் தாழ்த்தி வருவதாக பா.ம.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளிடம் கேட்டபோது, பா.ம.க. குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் இருக்கிறது.

தே.மு.தி.க.வுக்கு அனைத்து தொகுதிகளிலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே தே.மு.தி.க.வையும் கூட்டணியில் இணைத்து கூட்டணி பலத்துடன் பல தொகுதிகளை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம். இரு கட்சிகளுடனும் பேசி கொண்டிருக்கிறோம். பா.ம.க.தங்களுக்கு செல்வாக்குள்ள 10 தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

கூட்டணி என்றால் ஒவ்வொரு கட்சியின் ஆதரவுடன் மற்ற கட்சிகள் வெற்றி பெறவேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு மிக்க இடங்களில் அவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று நினைத்தால் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவேண்டாமா? ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் எல்லாமே கேட்பதால் தான் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றனர்.

தாம்பரத்தில் ரெயில் மறியல்: சோனியா உருவபொம்மை எரிப்பு- நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ததால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும் ராஜீவ் கொலையாளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
இக்கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் மாவட்ட செயலாளர் ராஜன் தலைமையில் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டனர். 6–வது பிளாட் பாரத்தில் செங்கல்பட்டு செல்ல தயாராக இருந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். சுமார் 30 நிமிடம் போராட்டம் நீடித்தது. ரெயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள் திடீர் என தாங்கள் மறைத்து வைத்து இருந்த சோனியா, ராகுல் காந்தி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 50 பேரை கைது செய்தனர்.

ஜி-20 கூட்டத்தில் பங்கேற்கும் நிதி மந்திரி ப.சிதம்பரம் சிட்னி நகரம் வந்தடைந்தார்


‘ஜி-20’ என்றழைக்கப்படும் வளரும் நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் பிரபல வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்தாலோசிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று சிட்னி நகரை வந்தடைந்தார்.

சர்வதேச நிதியத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில் நாளை பங்கேற்கும் அவர் 3 நாட்கள் இங்கு தங்கி சவுத் வேல்ஸ் நாட்டின் அரசு பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

பிரபல தொழிலதிபர்களுடனான வட்ட மேஜை சந்திப்பில் பங்கேற்கும் ப.சிதம்பரம், முதலீட்டாளர்கள் சிறப்புக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றுகிறார். வரும் 25-ம் தேதி சிட்னி நகரில் இருந்து புறப்பட்டும் அவர் இந்தியா சென்றடைகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிதி மந்திரியுடன் சிட்னி நகருக்கு வந்துள்ளனர்.